×

‘பிரிந்த உறவுகள் ஒன்று சேருவார்களாம்…’ துடைப்பத்தால் மாமன், மைத்துனரை அடிக்கும் விநோத திருவிழா: ஆண்டிப்பட்டி அருகே ருசிகரம்

ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் சேற்றில் நனைத்த துடைப்பத்தை கொண்டு கிராம மக்கள் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பொங்கல் வழிபாடு, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொதுவாக விழாவின் கடைசி வழக்கமாக கிராமத்தில் உள்ள மக்கள் தங்களின் மாமன், மைத்துனர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி கொண்டாடுவார்கள். ஆனால் இந்த கிராமத்தில் விழாவின் கடைசி நாளில் கிராம மக்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதமான நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று கிராமத்தில் உள்ள மக்கள், தங்களின் மாமன், மைத்துனர்களை துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. அடிப்பதற்கு முன்பாக துடைப்பத்தை சாக்கடை நீரிலும், சேறு மற்றும் சகதியில் நனைத்துக் கொண்டு அடித்துக் கொண்டனர். மேலும் சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடி வாங்கி கொண்டனர். இந்த வினோத திருவிழாவை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். துடைப்பத்தை சாக்கடையில் நனைத்து தாக்கி கொள்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும், நீண்டநாள் பிரிந்து வாழும் உறவுகள் சேர்வார்கள் எனக் கூறுகின்றனர்.

The post ‘பிரிந்த உறவுகள் ஒன்று சேருவார்களாம்…’ துடைப்பத்தால் மாமன், மைத்துனரை அடிக்கும் விநோத திருவிழா: ஆண்டிப்பட்டி அருகே ருசிகரம் appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Andipatti ,Muthalamman ,Maravapatti ,Andipatti, Theni district ,Separated relations ,-in-law ,Rushikaram ,
× RELATED ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர்...